பாஜகவை கூட்டணியில் சேர்க்காமல் அதிமுக விரட்டி விட்டதால் ஜெ. மீது அவதூறு: சி.ஆர்.சரஸ்வதி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று நள்ளிரவு சென்னை வந்தார்.
ஜவடேக்கர் அளித்த பேட்டியில், மத்திய அரசின் உதய் திட்டத்தை அகில உலகமே அங்கீகரித்துள்ளது. இத்திட்டம் 5 கோடி மக்கள் குறிப்பாக பெண்கள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உதய் திட்டத்தை அமல்படுத்த பல மாநிலங்கள் முன்வந்துள்ளது. எல்.பி.ஜி எரிவாயுவுக்கும் இது ஒரு புதிய மாற்றாக இருக்கும். இது போல பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதேநேரம், தமிழக அரசு உதய் திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை என்றார் ஜவடேக்கர்.
இதுகுறித்து, அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், "உதய் திட்டம் தனியாருக்கு நலன் தரக்கூடியது என்பதால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை. தமிழக முதல்வர் வலியுறுத்திய எத்தனையோ திட்டங்களை மத்திய அரசு செய்யவில்லை.
அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்க்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் ஜவடேக்கர் இவ்வாறு அவதூறு கூறிவருகிறார். தமிழக நலன் என்றால் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்" என்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை தன்னால் சந்திக்க கூட முடியவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார், அதை பொன்.ராதாகிருஷ்ணன் ஆமோதித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். இப்போது ஜவடேக்கர் தமிழக முதல்வர் மீது தாக்குதலை தொடங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்க்கவில்லை என்பதுதான் இதுபோன்ற மோதல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications