தமிழக மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன்: சோனியா
டெல்லி: புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வர்தா புயல் தமிழக மக்களை பாதித்திருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தேன். புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மனவருத்தமடைய செய்தது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
இயற்கையின் சீற்றத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த சில மாவட்ட மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன். சென்ற ஆண்டு இயற்கையின் பேரழிவில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வந்ததை இந்த நாடறியும். அதேபோல் தற்போதும் அவர்கள் மீண்டு வருவார்கள்.
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என எதிர்பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்து கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.