த்தூ...ன்னு விஜயகாந்த் துப்பிய ஊடகங்களிடம் ஆதரவு கேட்டு கெஞ்சிய பிரேமலதா
சென்னை: ஆட்சி அமைக்கப் போவதாக கனவில் மிதக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தம்முடைய கணவர் த்தூ....என நாகரிகமே இல்லாமல் துப்பிய ஊடகங்களிடத்தில்தான் தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டிருக்கிறார்.
விஜயகாந்துக்கு ஊடகங்கள் என்றாலே அலர்ஜிதான்... கேட்கிற எந்த கேள்விக்கும் "தெளிவான" பதில் சொல்ல முடியாத 'எதிர்க்கட்சி' தலைவராக வலம் வந்தவர் விஜயகாந்த்.
கேள்வி கேட்கும் செய்தியாளர்களை தரக்குறைவாக திட்டுவது, அடிப்பது, தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க என இந்தியாவில் எந்த ஒரு தலைவரும் காட்டாத 'நிதான'த்தை காட்டி வருபவரும் இவர்தான்.... கட்சி தலைமையகத்துக்குள் தன்னுடைய கேப்டன் டிவியை தவிர வேறு எந்த ஒரு ஊடகத்தையும் அனுமதிக்காத "கொள்கை" கோட்பாடு கொண்டவர் விஜயகாந்த்.
இதன் உச்சகட்டமாக பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே செய்தியாளர்களை நோக்கி த்தூ...என காறி உமிழ்ந்து தன்னுடைய அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த். தற்போது மொத்தமே 5-6% வாக்கு வங்கி வைத்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதால் அக்கட்சி தொண்டர்கள் திகைத்து போயுள்ளனர்; அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர்.
ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி, அடுத்த ஆட்சி நாங்கதான் என்ற ரீதியில் இன்று பேட்டி கொடுத்தார். அது அவருடைய கனவு காணும் உரிமை. அதே நேரத்தில் திமுக- அதிமுக ஆட்சிகளால் தமிழகம் நாசமாகிவிட்டது; நாங்கள் வந்தால் முன்னேற்றுவோம்; ஆகையால் ஊடகங்கள் மாற்று அரசியல் சக்தியான தங்களை ஊக்கப்படுத்தி மக்களிடத்தில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பிரேமலதா.
அதுவும் த்தூ என கணவர் விஜயகாந்த் காறி துப்பிய ஊடகங்களிடம்தான் இந்த ஆதரவைக் கேட்டிருக்கிறார் பிரேமலதா. இதுநாள் வரை இப்படியான பேட்டிகளையெல்லாம் கொடுத்து, ஊடகங்களிடம் கெஞ்சாதவர் பிரேமலதா. இப்போது ஓட்டுக்காக ஊடகங்களை நாடி வந்துள்ளார்.