“130-160 தொகுதிகளில் வெற்றி”... மத்திய உளவுத்துறையே சொல்லி விட்டதாக பிரேமலதா பிரச்சாரம்!
தர்மபுரி: மத்திய உளவுத்துறையின் அறிக்கைப்படி தமிழகத்தில் 130 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியோடு கை கோர்த்துள்ளது. இதனால், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், தர்மபுரி மாவட்டத்தின் 5 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேன் மூலம் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

கருத்து திணிப்புகள் தான்...
அதிமுக இனி லெட்டர் பேடு கட்சியாகப் போகிறது. திமுக, இல்லாமல்போன கட்சியாகி விட்டது. பல்வேறு சேனல்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கருத்து திணிப்புகள்தான்.

ரகசிய அறிக்கை...
மத்திய உளவுத்துறையின் அறிக்கை ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ‘தமிழகத்தில் 130 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் நடக்கும்...
விஜயகாந்த் முதல்வராவதும் கூட்டணி தலைவர்கள் அமைச்சர்கள் ஆவதும் உறுதி. இந்த கூட்டணி தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை தரப்போகிறது.

வாக்குகளை வீணாக்காதீர்கள்...
எனவே நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். தமிழக மக்களின் வளர்ச்சி முக்கியம். எனவே மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்" என இவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications