சைக்கிள் ஓட்டி வித்தைக் காட்டுபவர்கள் ‘நமக்கு நாமமே’ என்பதை உணர வேண்டும்: பிரேமலதா
சென்னை: தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி தலைவர் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் வகையில் ‘நமக்கு நாமே' என்று சைக்கிள் ஓட்டி வித்தை காட்டுகிறார். ஆனால் ‘நமக்கு நாமமே' என்று அவர் உணர வேண்டும்' என மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கோப்பணம் பாளையத்தில் தேமுதிகவின் மக்களுக்காக மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றம் வேண்டும்...
அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "அதிமுக, திமுகவை குறை கூறி நான் ஓட்டுக்கேட்க விரும்பவில்லை. 2016-ல் மாற்றம் வேண்டும் என்பதை நீங்களே சிந்தித்து பார்க்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் இல்லை...
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை. வெங்கரையில் மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர் வற்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

ரத்த தான முகாம்...
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் அதிகம் தேவைப்படும் காலக்கட்டத்தில் நாம் உள்ளதால், இங்கு வந்துள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் ரத்ததானம் செய்யவேண்டும். இதற்காக தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் ரத்ததானம் முகாம் நடத்துவதற்கான தேதியை தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார்.

நமக்கு நாமமே...
தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி தலைவர் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் வகையில் ‘நமக்கு நாமே' என்று சைக்கிள் ஓட்டி வித்தை காட்டுகிறார். ஆனால் ‘நமக்கு நாமமே' என்று அவர் உணர வேண்டும்.

இலவசக் கல்வி, மருத்துவம்...
அதே போல் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால், கல்வி மற்றும் மருத்துவம் மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

விஷ்ணுபிரியா விவகாரம்...
திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயர் போலீஸ் அதிகாரிகள் நெருக்கடியால் உயிர் இழந்த அவர், தன்னுடைய வாக்குமூலம் போன்று எழுதியுள்ள டைரியில் போலீஸ் துணை சூப்பிரண்டு என்றால் டம்மி என்று பொருள்படும் படி எழுதி உள்ளார்.

சாதாரண பெண்களின் பாதுகாப்பு?
இதன்மூலம் அவர் மேல் அதிகாரிகளால் எந்தளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார் என்பது தெரிகிறது. தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. துணை போலீஸ் சூப்பிரண்டுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.

பூரண மதுவிலக்கு...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பதை உறுதி கூறுகிறேன். அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளையும் அப்புறப்படுத்தும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது. வரும் தேர்தலில் தேமுதிகவுக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications