அம்பி, அந்நியன், காந்தி, கோட்சே, ரமணா, ஞானப்பழம்.. எல்லோரும் ஓர் முகத்தில்.. அது யார் தெரியுமா?
திண்டுக்கல்: இதுவரை அய்யாவை நம்புனீங்க, அம்மாவை நம்புனீங்க. இந்த முறை அண்ணனை நம்புங்க. நமது "கேப்டன்" அம்பியாகவும் இருப்பார், அதேசமயம், அந்நியனாகவும் மாறுவார். காந்தியாகவும் இருப்பார், தேவைப்பட்டால் கோட்சேவாகவும் மாறுவார். அவர் ஒரு ஞானப்பழம் என்று தேமுதிக மகளிர் அணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்காக ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்து ஆவேசமாக பேசி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த். அந்த வகையில் திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்திலும் அவர் வழக்கம் போல ஆவேசமாக பேசினார்.
அவரது பேச்சிலிருந்து...

திமுகவில் குழப்பம்
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என மக்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு கருணாநிதியை முன்னிறுத்துவதா, அல்லது மு.க.ஸ்டாலினை முன்னிறுத்துவதா என்று திமுகவில் குழப்பம் நிலவி வருகிறது

யோவ் உட்காருயா
விஜயகாந்த் அன்று சட்டசபையில் எழுந்து பேசியவுடனேயே சபாநாயகர், அமைச்சர் பேசிய பிறகு நீங்கள் பேசுங்கள் என்றார். அப்போது விஜயகாந்த் அமைதியாக அமர்ந்தார். அப்போது பேச வேண்டியதை விட்டுவிட்டு ஏதேதோ விஷயங்களை பேசியதால், கேப்டன் விஜயகாந்த் கொந்தளித்து எழுந்து, 'யோவ் உட்காருயா உங்களுக்கென்ன நான் பதில் வேண்டும்' என்றார்.

நத்தம் உட்காருயா
அப்போது நத்தம் விஸ்வநாதன் ஏதே பேசவந்த போது, யோவ் நத்தம் உட்காருயா என்று கூறினார். இது தான் அன்றைக்கு நடந்தது. இது சட்டசபையில் இருந்த பாலபாரதிக்கு தெரியும். சட்டசபையில் இருந்த எல்லோருக்கும் தெரியும்.

அப்ப போட்டார் சபதம்
அன்றோடு சட்டசபைக்கு செல்லமாட்டேன். மீண்டும் முதல்வராகத்தான் சட்டசபைக்குள் கால் வைப்பேன் என்ற உறுதியோடு வெளியே வந்தார் கேப்டன்

நானே அனுப்பி வைக்கிறேன்
இன்று தேமுதிகவிலிருந்து மாவட்டச் செயலாளர்களை திமுகவுக்கு அழைக்கிறார்களாம். திமுகவில் அதே பதவி வழங்கப்பட்டால், தேமுதிக மாவட்ட செயலாளர்களை நானே அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன்.

அப்பழுக்கற்றவர்கள்
அடுத்து திருச்சியில் நடந்த கூட்டத்தில் பிரேமலதா பேசியதிலிருந்து: தமிழகத்தில் இதுவரையில் ஆண்டு வந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்திருப்பதுதான் மக்கள் நலக்கூட்டணி. இந்தக் கூட்டணியில் அப்பழுக்கற்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

குழப்பத்தை ஏற்படுத்திய கருணாநிதி
கூட்டணி தொடர்பாக திமுகவுடன் ஒரு முறைகூட முறையான சந்திப்பு நடைபெறவில்லை. திமுக தலைவர் கருணாநிதிகூட, அவராகவேதான் பழம் நழுவி பாலில் விழப்போகிறது எனக்கூறி குழப்பத்தை உருவாக்கினார். அதை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. உடனே அண்ணன் வைகோ
ஆவேசப்பட்டார்.

அவர் ஞானப் பழம்
அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், பழம் நழுவி பாலிடாலில் விழுந்துவிட்டது என சொன்னார். பழம் நழுவி எங்கேயும் விழவில்லை. கேப்டன் - ஞானப்பழம். அதனால் தான் தேனில் விழுந்துள்ளது.

அம்பி டூ அந்நியன்
சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாதபோதே வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை விஜயகாந்த் மறுத்தவர். நம்ம கேப்டன், அம்பியாகவும் இருப்பார், அந்நியனாகவும் மாறுவார். காந்தியாகவும் இருப்பார், தவறு நடந்தால் கோட்சேவாகவும் அவர் மாறுவார். அவர் எதிலும் சிந்தித்து சரியான முடிவெடுப்பவர்.

மாபெரும் கூட்டணி
அதனால்தான் தமிழகத்தை முன்னணி மாநிலமாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு மக்கள் நலக்கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்போது மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது மக்கள் நலக்கூட்டணி.

அரசனை நம்பி புருஷனை விட முடியுமா
திமுகவுடன் கூட்டு வைத்தால் ஈசியாக ஜெயித்திருக்கலாம். ஆனால் அது, அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக தான் ஆகியிருக்கும். இங்கிருந்து வேறு பக்கம் சென்ற 9 துரோகிகளின் கதி என்னவாகப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். தமிழக அரசியல் வரலாற்றில் துரோகம் செய்தவர்கள் அடையாளம் இல்லாமல போனதுதான் வரலாறு.

சவால் விட்டவர்கள் ஜெயித்ததில்லை
"கேப்டனிடம்" சவால்விட்ட ஜெயலலிதா பெங்களூரு சிறைக்கு சென்றார். கொடநாடு நாயகியாக இருந்தாலும் சரி, காமடியனாக இருந்தாலும் சரி கேப்டனை எதிர்த்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

ரமணாவாக மாறுவார்
"கேப்டன்" சமூகத்தை மாற்ற ரமணாவாக உருவெடுப்பார். இதுவரை அம்மாவை நம்புனீங்க, அய்யாவை நம்புனீங்க, இந்த ஒருமுறை அண்ணனை நம்புங்க. நிச்சயம் அவர் உங்களை காப்பாற்றுவார் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications