அவர் பேசியது மட்டும் புரிஞ்சுதா.. தொடர்ந்து எம்.ஜி.ஆரைக் கிண்டலடிக்கும் பிரேமலதா
வேலூர்: "கேப்டன்" பேசுவது புரியவில்லை என்கிறார்கள். எம்.ஜி.ஆர் பேசியது புரிந்ததா. அதுவும் புரியவில்லைதானே என்று மீண்டும் எம்.ஜி.ஆர் பேசியதை குத்திக் காட்டி பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
மேலும், 'இந்த முறை ''டாடி''க்கும், ''லேடி''க்கும் வாய்ப்பு இல்லை. உங்களுடைய ''பிக் பிரதர்'' கேப்டன் விஜயகாந்துக்குத்தான் வாய்ப்பு. நான் வேலூருக்கு சொந்தக்காரி. உங்களுடைய மாப்பிள்ளையை வெற்றி பெறச் செய்யுங்கள்' என்றும் அவர் வேலூர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 40 தினங்கள் உள்ளது. அதிமுக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை வெளியிட்டு விட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார் ஜெயலலிதா.
இந்த தேர்தலில் மாநிலத்திற்கு என்ன திட்டங்கள் வைத்து இருக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று தேமுதிகவிடம் எந்த திட்டங்களும் இல்லை. ஆனாலும்,ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு மாற்று கேப்டன்தான் என்று குரல் உயர்த்தி சவால் விடுத்து வருகிறார் பிரேமலதா. கருணாநிதி, ஜெயலலிதாவை நேரடியாக தாக்கி வருகிறார்.

பிக் பிரதர்
நேற்று வேலூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''இந்த முறை ''டாடி''க்கும், ''லேடி''க்கும் வாய்ப்பு இல்லை. உங்களுடைய ''பிக் பிரதர்'' கேப்டன் விஜயகாந்துக்குத்தான் வாய்ப்பு. நான் வேலூருக்கு சொந்தக்காரி. உங்களுடைய மாப்பிள்ளையை வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்றார்.

விரட்டும் கூட்டணி
இந்த கூட்டணி தேர்தல் வரை தாங்காது என சொல்லியிருக்கிறார்கள். அவர்களை இந்த தமிழகத்தை விட்டே விரட்டும் கூட்டணி இதுதான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என்றார்.

தலைக்கு மேல் வழக்கு
ஈரோட்டில் பேசிய பிரேமலதா, எங்கள் கூட்டணி ஜெயித்தால் கேப்டன் தான் முதல்வர் என நாங்கள் உறுதியாக சொல்லுவோம். ஆனால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ அப்படி சொல்ல முடியாது. இரண்டு பேருக்குமே தலைக்கு மேல் வழக்கு இருக்கிறது. விரைவில் விசாரணை வர இருக்கிறது என்றார்.

மாயவலையில் விழாதீர்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்றவர், கடைசியாக எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சிலரை தி.மு.க.வினர் வளைக்கின்றார்கள். அங்கு சென்றவர்களுக்கு சால்வை மட்டும் தான் மிஞ்சும். எனவே யாரும் மாய வலையில் வீழ்ந்து விடாதீர்கள் என்றார்.

காந்தி - கோட்சே
சமீபத்தில் திருப்பூரில் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ''கேப்டன் விஜயகாந்த் மகாத்மா காந்தி மாதிரி. தேவைப்பட்டால் கோட்சேவாகவும் மாறுவார்'' என்று அதிரடியாக பேசினார். அதுமட்டுமின்றி அமைச்சர்கள் முதுகு வளைந்து கும்பிடு போடுகிறார்கள் கூறினார்.

புரியாத பேச்சு
கேப்டன் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று கூறுகிறீர்கள், அப்படி என்றால் எம்ஜிஆர் பேசியது உங்களுக்கு புரிந்ததா? அவர் பேசியதும் தானே புரியவில்லை. ஏன் கேப்டனை மட்டும் அவர் பேசுவது புரியவில்லை என்று குற்றம்சாற்றுகிறீர்கள்'' என்று கேட்கிறார் பிரேமலதா.
உங்களுக்கு புரியுதா மக்களே!












Click it and Unblock the Notifications