25ம் தேதி நெல்லையில் பேசப் போகிறாராம் பிரேமலதா.. என்ன பேசி குழப்புவாரோ!
நெல்லை: சட்டசபைத் தேர்தலில் தான் குழம்பியது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறது தேமுதிக. ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் விஜயகாந்த் குழம்பிப் போக காரணம என்று கூறப்படும் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 25ம் தேதி நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
பிரேமலதா பேசுகிறார் என்றால் ஏதாவது பொடி வைத்துப் பேசுவார் என்றாகி விட்டது. இப்படித்தான் காஞ்சிபுரம் வேடல் மாநாட்டில் பிரேமலதா அதிமுக, திமுக இரண்டையும் விமர்சித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த்தும் பிரேமலதா பேசியதையே கிட்டத்தட்ட வழிமொழிந்து பேசினார்.

அதன் பிறகுதான் திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அதை உடனடியாக விஜயகாந்த் மறுத்து விட்டார். இதற்குக் காரணம், திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பிரேமலதா கூறியதால்தான் என்று தகவல்கள் வெளியாகின. அடுத்து பாஜகவுடன் பேசிப் பார்த்தார்கள். அதுவும் புஸ்ஸாகிப் போனது.
இந்த நிலையில் மகளிர் தின மாநாட்டில் விஜயகாந்த் சற்று தெளிவாகப்பேசி தனியாகத்தான் போட்டி என்று தெளிவாக அறிவித்தார். ஆனால் கடைசியாக மைக்கைப் பிடித்த பிரேமலதா தனித்துப் போட்டிதான், ஆனால் எங்களது கூட்டணிக்கு வருகிறவர்கள் வரலாம் என்று கூறி மிகத் தெளிவாக குழப்பிவிட்டுப் போனார்.
இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் குழம்பிப் போனது. தற்போது தேமுதிகவை இழுக்க மீண்டும் திமுக களம் இறங்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியும் முயல்கிறது. பாஜகவும் பதறுகிறது.
இந்த நிலையில், 25ம் தேதி நெல்லையில் தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு பேசப் போகிறாராம்.
இந்த கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திக்காட்ட நெல்லை தேமுதிகவினர் உறுதி பூண்டுள்ளனராம். கூட்டம் நடத்த முக்கிய இடங்களைத் தேர்வு செய்து அனுமதி கேட்டுள்ளனராம். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து 26ம் தேதி நாகர்கோவிலும், தொடர்ந்து தூத்துக்குடியிலும் கூட்டம் நடைபெறவுள்ளதாம்.
முதல் கூட்டமான நெல்லை கூட்டத்தில் பிரேமலதா என்ன பேசப் போகிறார் என்று பலரும் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். தேமுதிகவின் நிலைப்பாட்டை அவர் நெல்லை கூட்டத்தில் வெளிப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.












Click it and Unblock the Notifications