விஜயகாந்த் பற்றி பேச பேச, அடக்க முடியாமல் தேம்பி அழுத பிரேமலதா! பிரச்சார மேடையில் உருக்கம்!
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த்தோடு சேர்ந்து தேமுதிக, அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் அருகில் உள்ள வாணாபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும், விஜயகாந்த் பற்றியும் பேசும்போது நா தழுதழுத்து உடைந்து போய் பேசினார். "கேப்டன் இறந்துவிட்டார், கேப்டனுக்காக உயிரை விடும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்தத் தொண்டர்களை நான் காப்பாற்றுவேன் என்று சூளுரைத்து வந்திருக்கிறார் அண்ணியார் பிரேமலதா." என உருக்கமாகப் பேசினார் குமரகுரு.
குமரகுரு பேசும்போதே குரல் உடைந்து, அவர் கண் கலங்கினார். அவர் பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கண்ணீர் விட்டு அழுதார். பிரேமலதா கண்ணீர் விட்டதைப் பார்த்து தேமுதிக தொண்டர்களும் கண் கலங்கினர்.
தொடர்ந்து குமரகுருவை ஆதரித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் குறித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி குறித்தும் உருக்கமாகப் பேசுனார். அவர் பேசும்போதே கண்ணீர் விட்டு அழுதார்.
பிரேமலதா பேசும்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். எங்கு சென்றாலும் இதுபோல உண்மையான தொண்டர்களை என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் விஜயகாந்த் வாழ்ந்த இந்த தொகுதியை என்னால் மறக்க முடியாது என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் தொண்டர்களிடம் நமது கூட்டணி கட்சியின் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரேமலதா, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கண்ணீர் விட்டதைக் கண்ட தேமுதிக, அதிமுக தொண்டர்களும் கலங்கினர்.

விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கிய பிறகு முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்று 2006 முதல் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தபோது, அருகே உள்ள திருநாவலூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார் குமரகுரு. 2011ல் விஜயகாந்த், அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ ஆனார். அப்போது உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏவாக இருந்தார் குமரகுரு.
ஒரே காலகட்டத்தில் விஜயகாந்த், குமரகுரு இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றி உள்ளனர். இந்நிலையில் தான் விஜயகாந்த் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார் குமரகுரு. குமரகுரு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருக்கு ஆதரவாக, ரிஷிவந்தியம் பகுதியில் பிரச்சாரம் செய்துள்ளார் பிரேமலதா.
கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக, மலையரசன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். கள்ளக்குறிச்சியில் திமுக - அதிமுக - பாமக இடையே நேரடி மோதல் உறுதியாகியுள்ள நிலையில் அங்கு போட்டி சுவாரஸ்மாகியுள்ளது.












Click it and Unblock the Notifications