எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிரேமலதா விஜயகாந்த் பூடகப் பேச்சு!
காஞ்சிபுரம்: சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பதில் கிடைக்காத நிலையில் அக்கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது பிரேமலதா விஜயகாந்த்தின் பேச்சு.
காஞ்சிபுரம், வேடல் கிராமத்தில் இன்று திருப்புமுனை மாநாட்டை நடத்துகிறது தேமுதிக. இதில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் மாநாட்டுத் திடலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்திடம், செய்தியாளர்கள் கூட்டம் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் கேட்டனர். அப்போது ஒரு செய்தியாளர், தேமுதிக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தன் தலைமையில் புதிய கூட்டணி அமைக்குமா என்று கேட்டபோது, அமைக்கலாம் என்று பதிலளித்தார் பிரேமலதா.
மேலும் அவர் கூறுகையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டுள்ளன. யாரும் இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே எதுவுமே இப்போதைக்கு இறுதியானதல்ல.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணிகள் முழு வடிவம் பெறும். அதுவரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். திருப்புமுனைகள், ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
இவர் சொல்தைப் பார்த்தால் தனிக் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் விஜயகாந்த் உள்ளாரா என்ற சந்தேகம் வருகிறது. அப்படி அமைத்தால் அக்கூட்டணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதும் புரியவில்லை. வழக்கம் போல விஜயகாந்த்தே அவரது வாயால் எதாவது சொன்னால்தான் உண்டு.