50 ஆண்டுகால தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
நெல்லை: 50 ஆண்டுகால தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி சார்பாக பிரேமலதா விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல்கிணறு, பணகுடி, மற்றும் நாங்குநேரி தொகுதியில் உள்ள வள்ளியூர், களக்காடு, நாங்குநேரி பகுதியிலும் வேனில் நின்று ஓட்டு கேட்டார்.

பாளை சட்டமன்ற தொகுதியில் உள்ள மேலப்பாளையம், நெல்லை சட்டமன்ற தொகுதியில் உள்ள தச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. மக்கள்நலக்கூட்டணி மாபெரும் வெற்றிக்கூட்டணி. முதலமைச்சராக விஜயகாந்த் வரவேண்டும் என்று அவரது தலைமையில் உருவான இந்த கூட்டணி புதிய சரித்திரத்தை உருவாக்க வேண்டும். நான் வருகின்ற வழியில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளித்தன. குடிநீர் பற்றாக்குறையை போக்க எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாகவே பல தொகுதிகளில் எற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். கிடப்பில் போடப்பட்டுள்ள கன்னடியன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்.
50 ஆண்டுகால தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை. தமிழக மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை திறந்து உள்ளனர். அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் மீண்டும் போர் ஏற்பட்டு உள்ளது. தர்மம் வெல்ல நீங்கள் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் கிரானைட் குவாரிகள் மூடப்படும். இளைஞர்கள், தாய்குலங்கள் ஒன்றிணைந்து எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனவே வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தியது போல கொள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தி வருகிறோம்.
எங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுவதை பார்த்து விஜயகாந்த் மீது வதந்தி அவதூறு பரப்புகிறார்கள். விஜயகாந்த் தமிழக மக்களுக்கு நல்லததைதான் செய்வார். இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் மீது எந்த லஞ்ச ஊழல் வழக்குகளும் இல்லை. அப்பழுக்கற்ற தலைவர்கள்.
ஆனால் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது ஏராளமான லஞ்ச ஊழல் வழக்குகள் உள்ளன. எனவே தி.மு.க. - அ.தி.மு.க.விற்கு சவுக்கடி கொடுக்கும் வெற்றி அணியாக இதை மாற்றுங்கள், இதுவரை ஆண்ட வயதானவர்கள் வீட்டிற்கு போகட்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் வரலாறு படைக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications