உரிமை இல்ல.. ஓட்டு மட்டும் வேணுமா.. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க பி.ஆர். பாண்டியன் கோரிக்கை
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. இதனை கண்டிக்க ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் அடிப்படை தேவைகள் எதுவாக இருந்தாலும் மத்திய அரசு அதனை செய்து கொடுப்பதில்லை.
வறட்சி நிவாரண நிதி அளிக்க மறுத்துள்ளது. தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறது.
மத்திய அரசு மிரட்டல்
இந்த நிலையில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் இருக்கும் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்கிற உள்நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் அதிமுக அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டி வருகிறது.
ஓபிஎஸ்ஸை வளைக்க..
அதே போன்று ஓபிஎஸ் அணியில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளையும் பெறவும் பாஜக முயன்று வருகிறது. தமிழ்நாடு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் போது தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசி வருகிறோம்.
அதிமுகவிற்கு வேண்டுகோள் கடிதம்
இந்தத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அதன் பொறுப்பாளர் மகாலிங்கத்தைச் சந்தித்தோம். அப்போது, முதல்வருக்கும் எம்பி தம்பிதுரைக்கும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கும் கடிதம் கொடுத்துள்ளோம்.
ஓபிஎஸ் அணியிடம் கடிதம்
இதனைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று தேர்தலை புறக்கணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் என்று அனைத்து தலைவர்களிடமும் வலியுறுத்தியுள்ளோம்.
உண்ணாவிரதம்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 1 முதல் 5ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். தஞ்சையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.