விலங்கை கழற்ற மறுத்த பெண் ஏட்டை தாக்கிய கைதி!
தருமபுரி: தருமபுரியில் கை விலங்கை கழற்ற மறுத்த பெண் போலீஸை தாக்கியதாக விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கீழ் செங்குட்டை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் மீது பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஏ.பள்ளிப்பட்டி காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
கடந்த மாதம் பிரபுவை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பிரபுவை அரூர் காவல்நிலைய தலைமைக்காவலர் காவேரி மற்றும் ஆயுதப்படை போலீஸார் பரமேஸ்வரி துர்காதேவி ஆகியோர் நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் பிரபுவை ஆஜர்படுத்திய பின்அவரைக்கூட்டிக்கொண்டு மீண்டும் சேலம் செல்வதற்காக பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் அவர்கள் காத்திருந்தனர்.
அப்போது தன்னுடைய கையில் போட்டிருக்கும் விலங்கை அவிழ்த்து விடுமாறு போலீஸாரிடம் பிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு தலைமைக்காவலர் காவேரி மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரபு, காவேரியை விலங்குடன் கூடிய கையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகத்திலும் தலையிலும் காயமடைந்த நிலையிலிருந்த தலைமைக்காவலர் காவேரியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
போலீஸ் ஏட்டை தாக்கியதாக போலீஸார் பிரபு மீது மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications