கோர்ட்டுக்குள் புகுந்து கைதியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கும்பல்!
சென்னை: சென்னை பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில் கைதி ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி வரதன் (34). இவர் மீது 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர், கடந்த 2010-ஆம் ஆண்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரைக் கொலை செய்த வழக்கின் விசாரணைக்காக வேலூர் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அழைத்து வரப்பட்டார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் மக்களோடு மக்களாக மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென வரதனை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதை கண்ட போலீஸார் அங்கிருந்து ஓடினர். பாதுகாப்பில்லாமல் விடப்பட்ட வரதனை அந்தக் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. அதன் பின்னர் அவர்கள் ஓடி விட்டனர். அதன் பின்னர் ஓடி வந்த போலீஸார், உயிருக்குப் போராடிய வரதனை, சிகிச்சைக்காக போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதன் உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் விஸ்வநாதனை கொலை செய்த வழக்கில் வரதன் முக்கியக் குற்றவாளியாக உள்ளார். எனவே விஸ்வநாதன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக வரதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கை நிறைய துப்பாக்கி வைத்திருந்தும் வரதனைக் கொன்ற கும்பலை தடுக்கவோ, சுட்டுப் பிடிக்கவோ போலீஸார் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை போலீஸாரின் கண் முன்பாக, அதுவும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் கண் முன்பாக நடந்ததால் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.