தமிழகத்தில் மே1 முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கிவருகின்றன. தற்போது விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது,
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சமீபத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை காரணமாக வைத்து தமிழகத்திலும் பஸ் கட்டண உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.
சாய்வு வசதி உடைய சொகுசு ஏர் பஸ்சுக்கு ரூ. 20, வோல்வோ பஸ்சுக்கு ரூ. 30, படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்சுக்கு ரூ. 50 உயர்த்தப்பட உள்ளது.
தேர்தலை முன்னிட்டு பஸ் கட்டண உயர்வை அமல்படுத்த இத்தனை நாட்களாக மாநில அரசு தடுத்து வைத்திருந்ததாகவும், இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால் ஆம்னி பஸ் உரிமையாளர்களை அரசு தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் பர்வீன் அளித்துள்ள ஒரு பேட்டியில்:
டீசல், உதிரிபாகம், டயர் விலை உயர்வு, காப்பீட்டு தொகை அதிகரிப்பு, சுங்க சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
ஆம்னி பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக பஸ்களிலும் கட்டண உயர்வு அமலாகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.