கோவையில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்… தனியார் பஸ்களில் குவியும் கூட்டம்
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், அரசு நிர்ணயித்ததை விட அரசு பேருந்துகளில் அதிக கட்டணமும், தனியார் பேருந்துகளில் குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது; இதனால், பெரும்பாலான மக்கள், அரசு பேருந்துகளைப் புறக்கணித்து தனியார் பேருந்துகளை நாடி வருகின்றனர்.
தமிழகத்தில், கடந்த 2006 - 2011 ஆண்டு கால கட்டத்தில் தி.மு.க., ஆட்சியின்போது, ஐந்தாண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படவே இல்லை; இதன் காரணமாக, அரசு போக்குவரத்துக்கழகம் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வந்தது; இதைச் சமாளிப்பதற்காக, அரசு பேருந்துகளுக்கு 'எல்.எஸ்.எஸ்.,' 'எக்ஸ்பிரஸ்', சொகுசு பேருந்து என பல விதமான பெயர்களைச் சூட்டி, கூடுதல் கட்டணத்தை வசூலித்து வந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., இதை கடுமையாக எதிர்த்தது.
பேருந்து கட்டண உயர்வு
2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முந்தைய ஆட்சியில் கட்டணம் உயர்த்தாததைக் காரணம் காட்டியே, அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக அ.தி.மு.க., அரசு அறிவித்தது; அதை எதிர்த்த பொதுமக்கள் வேறு வழியின்றி பின்னர் ஏற்றுக் கொண்டனர்.
மறைமுகக் கட்டண வசூல்
அதேநேரத்தில், அரசே கட்டணத்தை உயர்த்திய பின், தி.மு.க., ஆட்சியில் அறிவித்ததைப் போன்ற 'மறைமுக' கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் நம்பினர்; ஆனால், அந்த நம்பிக்கையை அ.தி.மு.க., அரசு பொய்யாக்கி விட்டது. இன்று வரையிலும், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பேருந்துகளிலும், ஆங்காங்கே தனியார் பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்ததை விட, கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
கோவை கோட்டத்தில் கட்டணக் கொள்ளை
இந்த விதிமீறலில், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது கோவை அரசு போக்குவரத்துக் கழக கோட்டம். இந்த கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் ரூட் பஸ்கள் பெரும்பாலானவற்றில், அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதே இல்லை; முன் பக்க கண்ணாடியில் இருக்கும் பெயருக்கேற்ப, இஷ்டம் போல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசுப் பேருந்தில் அதிகம்
கோவையிலிருந்து ஈரோடுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம், 42 ரூபாய்; இதற்கு தனியார் பஸ்களில் வாங்கும் கட்டணம், 45 ரூபாய்; ஆனால், அரசு பஸ்களில் பெறப்படும் கட்டணம் 59 அல்லது 60 ரூபாய். கோவையிலிருந்து மதுரைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம், 84 ரூபாய்; அரசு பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணம், 112 அல்லது 116 ரூபாயாகும்.
தனியார் பேருந்துகளில்
திருச்சி, பழநி, உடுமலை, திருப்பூர், வால்பாறை என பல ஊர்களுக்குச் செல்லும் அரசு பஸ்களிலும், அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட, குறைந்தபட்சம்10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 30 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் தனியார் பேருந்துகளில் இந்த அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதுதான்.
சூப்பர் பேருந்துகள் கட்டணம் குறைவு
தனியார் பேருந்துகளைப் பொறுத்தவரை, எவ்வளவு புதிய பஸ்களாக இருந்தாலும், அதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கின்றனர்.
அடிவாங்கிய அரசு பேருந்துகள்
ஆனால், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள், புதிதாக இருந்தாலும், பல இடங்களில் 'அடி வாங்கி' அறுதப்பழசாகியிருந்தாலும், அதற்கு 'சொகுசு பேருந்து', எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., என்று பெயரிட்டு, கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர்.
தனியார் பேருந்துகளுக்கு ஆதரவு
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், அரசு பேருந்துகளில் கட்டணம் அதிகமாகவும், தனியார் பேருந்துகளில் குறைவாகவும் இருப்பதால்தான், பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளைப் புறக்கணித்து, தனியார் பேருந்துகளை நாடிச் செல்கின்றனர்; அரசு போக்குவரத்துகழகங்கள், நஷ்டமாவதற்கும் இதுவே முக்கியக் காரணம் என்கின்றனர் நுகர்வோர்கள்.