பாதுகாப்பு கோரி தமிழகத்தில் மே 2ல் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி வரும் சனிக்கிழமை (மே 2) 30 ஆயிரம் தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய மருத்துவச் சங்க தமிழகப் பிரிவின் தலைவர் மருத்துவர் ஆர்விஎஸ் சுரேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழகத்தில் மருத்துவமனைகளும், மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த நான்கு மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன.

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக் கோருவதால் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தரக்கட்டுபாட்டு நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேலும், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் இடத்திலேயே அதன் தரம் குறித்து ஆய்வு செய்து, நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மே 2-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் மாநிலத்தில் உள்ள 3,450 தனியார் மருத்துவமனைகளும், 30 ஆயிரம் தனியார் மருத்துவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மே 2-ஆம் தேதி காலை 6 மணி முதல் மே 3-ஆம் தேதி காலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
அன்றைய தினம் தனியார் மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சைகள் தவிர வேறு எதுவும் நடைபெறாது. தனியார் மருத்துவர்களுக்கு அரசு மருத்துவர்களும் ஆதரவு அளிக்கும் வகையில் அன்றைய தினம் கருப்பு பட்டை அணிந்து பணிக்குச் செல்ல உள்ளனர்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு மணி நேரம் தர்னா போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம் வேண்டாம்... பொதுமக்கள் பாதிக்கப் படுவார்கள்
தனியார் மருத்துவர்களின் இந்தப் போராட்டம் தவிர்க்கப் பட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. இருப்பினும்,இதைக் கண்டித்தும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் இந்திய மருத்துவச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் நலன் கருதி இந்தப் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும். இந்திய மருத்துவச் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அரசு இப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும்' என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications