வலுக்கிறது ஜல்லிக்கட்டு போர்.. தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு லீவு!!
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆட்டோ, கால் டாக்சிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக பல கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் டி.சி. இளங்கோவன் தர்மபுரியில் பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்தார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் ஆட்டோ மற்றும் வாகனங்கள் ஸ்டிரைக் காரணமாக, பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்சி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பள்ளிகள் இயங்காது என்று தெரிவித்துள்ளார்.
நாளை அரசுப் பள்ளிகள் இயங்குவது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், தனியார் பள்ளிகள் நாளை இயங்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications