தமிழக இளைஞர்களின் வரலாறு காணாத பேரெழுச்சி...தமிழக அரசே! வேடிக்கை பார்ப்பது வெட்கமில்லையா?
ஜல்லிக்கட்டுக்காக தமிழ் இளைஞர்கள் வரலாறு காணாத பேரெழுச்சியுடன் போர்க்களமிறங்கியுள்ளனர். ஆனால் தமிழக அரசு தொடர்ந்தும் வேடிக்கை பார்ப்பது வெட்க கேடானது.
சென்னை: தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை மீட்க மாணவர்கள், இளைஞர்கள் வரலாறு காணாத பெரும் போரையே தமிழ் மண்ணில் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்தப் போராட்டத்துக்கு எதிராக போலீசாரை ஏவ மட்டும் தயாராக இருக்கும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக இந்திய கூட்டரசின் பெயரால் கபளீகரம் செய்யப்பட்டன. தமிழகத்தின் உரிமைகளுக்கு காவலாளிகளாக காட்டிக் கொண்டிருக்கும் அரசுகளும் கட்சிகளும் அடையாள எதிர்ப்புகளைத்தான் வெளிப்படுத்தின.
ஆனால் தமிழின வரலாற்றில் உரிமை மீட்பு போர் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சாட்சியமாக அலங்காநல்லூரில் மையம் கொண்ட புயல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி சீறிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஜல்லிக்கட்டுக்கான மல்லுக்கட்டு போர்தான்.

மத்திய அரசுக்கு எதிரான போர்
தமிழினத்தின் இந்த வீச்சை கண்டு பேச்சுமூச்சில்லாமல் வாய்மூடி மவுனியாக இந்திய மத்திய அரசு இருக்கலாம்.. இருக்கும்.. ஏனெனில் இந்த போர்க்கோலமே பச்சை துரோக இந்திய மத்திய அரசுக்கு எதிராகத்தான்.

பொம்மை அரசா?
இந்த பெருநெருப்பை அப்படியே அணையைவிடாமல் பாதுகாத்து உரிமையை மீட்டெடுக்க வியூகம் வகுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் இந்திய மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மை அரசாக மட்டுமே தமிழகத்தின் அரசாங்கம் இருக்கிறது.

அலங்காநல்லூர்
அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் அலங்காநல்லூரிலும் குண்டாந்தடிகளை களமிறக்கத் தெரிந்த தமிழக அரசால் 21 மணிநேர அடையாள அறவழிப் போராளிகள் மீதுகை வைக்க துணிவு இல்லை. அதனால் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போனது.

பெருநெருப்பாக...
இருந்தபோதும் அடங்கியதா தமிழினத்தின் பெருங்கோபம்? இல்லையே... வீதிக்கு வீதி போராட்டம்... வீதிக்கு வீதி முழக்கம்.. நான் தமிழன்; நான் தமிழச்சி; என்னுடைய தமிழினம்; என்னுடைய அடையாளம்; என்னுடைய பண்பாடு என்ற தமிழ்த் தேசியப் பேரெழுச்சி முழக்கம் தெருவெங்கும் பெரும் திரட்சியாக பேருருவாக வெடித்து கிளம்பியுள்ளது. இனி என்ன செய்யப் போகிறதாம் தமிழக அரசு?

ஓயாத போராட்டம்
இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும் ஓய்ந்துவிடவா போகிறது இந்த பெரும்போர்? நிச்சயம் நடக்கப் போவது இல்லை?

தொடை நடுக்கம் ஏன்?
ஜல்லிக்கட்டை தமிழக அரசே முன்னின்று நடத்தியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்முடைய வீட்டுக்கு அருகே தாமே 100 காளைகளை சீறிப் பாய்விடுகிற போது தமிழகத்து அரசு மட்டும் ஏன் கோழையாக முடங்கிக் கிடக்க வேண்டும்? எதற்காக இந்திய மத்திய அரசை பார்த்து தொடைநடுங்க வேண்டும்?

இரண்டே வாய்ப்புகள்
கடந்த காலங்களில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி சட்ட பாதுகாப்புடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது என்பது வரலாறு. தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல்களில் சீறிப் பாய்ந்தாக வேண்டும்! இல்லையெனில் ஆட்சிப் பொறுப்பைவிட்டு ஓடிப் போக வேண்டும் என்பதுதான் தமிழக அரசுக்கு முன்பு உள்ள வாய்ப்புகள்.












Click it and Unblock the Notifications