புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்கிறார்கள் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்? பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் இன்று இரவு பெங்களூரு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் இன்று இரவு பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக அணிகள் இணைந்து ஒன்றாகியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது டிடிவி தினகரன் தரப்பு. அதே போல எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் கடந்த 3 நாட்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ரிசார்ட் முன்பு ஒன்றுகூடி தினகரன் எம்எல்ஏக்கள் வெளியேற ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினகரனுக்கு எதிராகப் போராட்டம்
அப்போது தினகரன் உருவ பொம்மையையும் எரித்தனர். மேலும் அதிமுகவில் உண்மையான அதிமுக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பே என்றும், தினகரன் தரப்பினர் துரோகிகள் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஒட்டல் நிர்வாகம் எதிர்ப்பு
இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும், தனியார் ரிசார்ட் நிர்வாகம் 24ம் தேதி இரவுக்குள் (இன்று) அங்கிருந்து காலி செய்யக் கூறியுள்ளது. இதனால் தினகரன் தரப்பில் பரபரப்பு நிலவுகிறது.
பாஜக பின்னணி
தினகரன் தரப்பினரை புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற டெல்லி பாஜக தலைமையும், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், வரும் 25ம் தேதி முதல், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தங்களது விடுதிக்கு வரவுள்ளதாக அந்தச் சொகுசு ரிசார்ட் நிர்வாகம் கூறியுள்ளது.
பெங்களூரு பயணம்
வேறு வழி இல்லாமல் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கிச் செல்ல உள்ளார்கள். அங்கு உள்ள பிரபல நட்சத்திர சொகுசு ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்படவுள்ளார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.