ஜெ. மரணம் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதேபோல ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லமான வேதா நிலையத்தினை நினைவிடமாக மாற்றவும் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா மரணம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார்.
பல்வேறு தரப்பினரிடமிருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் ஊடகங்களிலும் பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
நீதி விசாரணை
ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும். நீதிபதி யார் என்று பின்னர் அறிவிக்கப்படும்.
நீதிபதி அறிக்கை
நீதிபதி விசாரணை நடத்தி அவர் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து இதனை அறிவித்துள்ளோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
|
வேதா நிலையம்
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக்கி பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அரசு நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.
அணிகள் இணைப்பு
இந்த இரண்டு உத்தரவுகளுமே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விதித்த நிபந்தனைகள் ஆகும். இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.