5 லட்சம் பணம், கார் கொண்டு வா... மனைவியைக் கொடுமைப்படுத்திய பேராசிரியர் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் கட்டிய மனைவியை 5 இலட்சம் பணமும், காரும் கேட்டு துன்புறுத்திய பேராசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரியா. இவருக்கும், திருச்செங்கோடு அருகே கருவேப்பம்பட்டி திருநகர் காலனியைச் சேர்ந்த கல்லுரிப் பேராசிரியர் பார்த்தசாரதி என்பவருக்கும் 2009 இல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. இந் நிலையில் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு பார்த்தசாரதி ஜெயப்பிரியாவை துன்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் சமரசம் செய்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெற்றோரிடம் ரூபாய் 5 லட்சம் ரொக்கமும், ஒரு காரும் வாங்கி வருமாறு மீண்டும் ஜெயப்பிரியாவை பார்த்தசாரதி துன்புறுத்தினாராம்.
இதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஜெயப்பிரியா மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பார்த்தசாரதியை செவ்வாய்க்கிழமையன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications