நிர்மலா தேவியை விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படும் - சந்தானம் பேட்டி!
நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை: புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்திட்ம் அனுமதி கோரப்படும் என்றும் நீதிமன்ற அனுமதி கிடைத்த பின்னர் நிர்மலாதேவியிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை உயர்அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள பேரம் பேசிய புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளார். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிர்மலாதேவிக்கு பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவரிடம் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
மாணவிகளிடம் பேசியது நிர்மலா தேவிதானா, அவரின் நோக்கம் என்ன. எந்த உயர் அதிகாரிக்காக நிர்மலாதேவி இந்த பேரத்தை நடத்தினார் என்பன உள்ளிட்ட கேள்விகளை சிபிசிஐடி போலீசார் முன்வைத்து வருகின்றனர். இதனிடையே நிர்மலாதேவியின் குரல் மாதிரி எடுத்து அதனை சோதிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தினார். 3வது நாளாக சந்தானம் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதிபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நீதிமன்ற அனுமதி கிடைத்தஉடன் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் இன்று மாலை வரை புகார்கள் வாங்கப்படும் என்றும் சந்தானம் கூறியுள்ளார்.