ஒண்டிவீரன் நினைவு தினம், பூலித்தேவன் பிறந்த நாள் விழா.. நெல்லையில் இன்று முதல் 144 தடை உத்தரவு
ஒண்டிவீரன் நினைவு தினம், பூலித்தேவன் பிறந்த நாள் விழாவையொட்டி நெல்லையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: ஒண்டிவீரன் நினைவு தினம், பூலித்தேவன் பிறந்த நாள் விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய ஒண்டிவீரன் நினைவு தினத்தையும், பூலித்தேவன் பிறந்த நாளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், மஜரா பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு நாள் 20.08.2018 அன்றும், பூலித்தேவன் பிறந்த நாள் 01.09.2018 அன்றும் கொண்டாட உள்ளது. இதனால், மேற்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வாகனங்களில் திருநெல்வேலிக்கு வந்து பல்வேறு பிரிவினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியைக் காப்பதற்காக 19.08.2018 அன்று காலை 6 மணி முதல் 02.09.2018 அன்று காலை 6 மணி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டமாக கூடுவதற்கும், வாள், கத்தி, கட்டைகள், கற்கள் போன்ற இதர தடைசெய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவதற்கும், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றுடன் ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, திருநெல்வேலியில், வாடிக்கையாக நின்று செல்லும் வாகனங்கள் வேறு இடங்களுக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், மாணவ மாணவியரை பள்ளி , கல்லூரிகளுக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வழக்கமாக செல்லும் ஆம்னி பஸ் ஆகியவை தவிர்த்து இதர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒண்டி வீரன் நினைவு தினம் மற்றும் பூலித்தேவன் பிறந்த தினம் ஆகியவற்றிற்கு வரும் தொண்டர்களை ஏற்றி வரும் சுற்றுலா வாகனங்கள் ஆகியவை திருநெல்வேலி மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 144 (1), (2) -ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications