கோவையில் ஆன்லைன் மூலம் விபச்சாரம்... கொல்கத்தா மற்றும் கர்நாடகா பெண்கள் மீட்பு!
கோவை: கோவையில் இணையதளம் மூலமாக நடைபெற்ற விபச்சாரத்தினைக் கண்டறிந்து கொல்கத்தா மற்றும் கர்நாடக பெண்களை மீட்டுள்ளனர் போலீசார்.
கோவை மாநகர் பகுதியில் நூதன முறையில் இணையதளம் வாயிலாக விபசாரம் நடைபெறுவதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இணையதளங்களை கண்காணித்தனர். அப்போது ஒரு இணையதளத்தில் வெளிமாநில விபசார அழகிகள் உள்ளதாக விளம்பரம் வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணுக்கு போலீசார் வாடிக்கையாளர் போல் போன் செய்து பேசினர்.
எதிர்முனையில் பேசிய விபசார புரோக்கர் தன்னிடம் வெளிமாநில அழகிகள் உள்ளதாகவும், ஒரு நாள் இரவுக்கு ரூபாய் 10 ஆயிரம் கட்டணமாக தர வேண்டும் என்றும் கூறினார். மேலும் உக்கடம் பஸ் நிலைய பகுதிக்கு வாருங்கள் என்றும் அழைத்தார்.
விபசார புரோக்கர் கூறிய இடத்துக்கு போலீசார் மாறு வேடத்தில் சென்றனர். அங்கு ஒரு காரில் 3 அழகிகள் மற்றும் ஒரு பெண் புரோக்கர் இருந்தனர். முக்கிய புரோக்கரான நசீர், வந்திருப்பது வாடிக்கையாளர் தான் என நினைத்து போலீசாரிடம் பேசினார்.
அப்போது மறைந்து இருந்த போலீசார் நசீரை மடக்கி பிடித்து கைது செய்தனர். காரில் இருந்த பெண் புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 5 செல்போன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கொல்கத்தாவை சேர்ந்த 2 அழகிகள் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அழகி உள்பட 3 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications