கதிராமங்கலம் போராட்டம்.. பேரா. ஜெயராமன் தவிர 9 பேருக்கு ஜாமீன் வழங்கியது தஞ்சை கோர்ட்!
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய 9 பேருக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய 9 பேருக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
ஓஎன்ஜிசி பொருட்களை சேதப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் விடுவிக்க கோரி கடந்த 1ம் தேதி முதல் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டம்
கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல் கதிராமங்கலம் எல்லை அய்யனார் கோயில் திடலில் முகாமிட்டு அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
9 பேருக்கு ஜாமீன்
கிராம மக்களின் காத்திருப்பு போராட்டம் இன்று 28வது நாளாக நீடிக்கிறது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜெயராமனுக்கு ஏற்கனவே ஜாமீன்
ஓஎன்ஜிசி பொருட்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் ஜெயராமனுக்கு ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், கடந்த ஜூன் 30-ம் தேதி, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்ட வழக்கில் பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
ஆனால் வெளியே வரமுடியாது
இந்நிலையில் பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஜெயராமனை தவிர 9 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயராமன் மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் தற்போது சிறையிலிருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது