ஜல்லிக்கட்டை இழிவுபடுத்திய சுப்பிரமணிய சுவாமிக்கு எதிர்ப்பு... கோவையில் கொடும்பாவி எரிப்பு!
ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேசிய சுப்பிரமணிய சுவாமியின் கொடும்பாவியை எரித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேசிய பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது கொடும்பாவியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்பிரமணிய சுவாமி ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசி வருகிறார். தனது டுவீட்டர் பக்கத்திலும் அவர் ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார்.

உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றால் அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் பொறுக்கிகள்தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் ஒரு பதிவை செய்திருந்தார்.
தமிழக எம்பிக்களை பூனை என்றும் அவர் விமர்சித்திருந்தார். ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்பிரமணிய சுவாமியின் கருத்து தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது சுப்பிரமணிய சுவாமிக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், அவரது கொடும்பாவியை எரித்தனர்.
இதையடுத்து கொடும்பாவியை எரித்த தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications