நெடுவாசலில் 127-வது நாள்... கதிராமங்கலத்தில் 88வது நாள் - நீடிக்கும் போராட்டம்
ஓஎன்ஜிசி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கும்பகோணம்: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 127வது நாளை எட்டியுள்ளது. கதிராமங்கலத்தில் 88வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயத்துக்கு கேடு விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசல் மக்கள் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி, பல்வேறு அரசியல் கட்சியினரும், நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
கவனஈர்ப்பு போராட்டம்
மத்திய, மாநில அரசுகள் இவர்களது கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் எத்தனையோ கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டும் இவர்களது குரல் அரசின் காதில் விழவில்லை.
நூதன போராட்டங்கள்
பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்று மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று அப்பகுதி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் 88வது நாள்
தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் உள்ள வயல்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய்கள் பதித்து கச்சா எண்ணை எடுத்து வருகிறது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
88வது நாளாக போராட்டம்
ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலம் கிராம பொதுமக்கள் தொடர்ந்து 88வது நாளாக பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சுதந்திர தின விழாவை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கிராமசபை தீர்மானம்
ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதால் ஒட்டுமொத்த நீர் வளம், நில வளம் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை மூடிவிட்டு உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கிராமசபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.