ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்.. போராட்டக்குழு அதிரடி அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டம் 43வது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஆலையை மூடும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கும்,மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை அடுத்து அப்பகுதி மக்கள் ஆலையை மூட வேண்டி போராட்டம் நடத்திவருகிறார்கள்.
மக்களின் போராட்டம் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் 43வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நச்சுக்கழிவுகளால் பாதிப்பு
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் கூறுகையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான நச்சுக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவை கடலில் கலப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும், தினமும் ஐந்து கோடி லிட்டர் தண்ணீர் ஆலைக்கு வழங்கப்படுகிறது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது. தண்ணீரிலும் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பொய்யான தகவல்கள்
மேலும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து எந்த வித கருத்துக்கேட்புக்கூட்டமும் நடத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அறிக்கையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் முறையில் எளிய வகையில் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய மாநில அரசுகளிடம் தவறான தகவல்களைக் கொடுத்து அனுமதி பெற்றுள்ளனர்.

புற்றுநோயாளிகள் அதிகரிப்பு
இந்த ஆலையில் இருந்து அதிகப்படியான கந்தக ஆக்ஸைடு வெளியேற்றப்படுவதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, உடனடியாக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியும் தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்படுவதை அவசர நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம் தொடரும்
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து, உரிமத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய அரசு தாமதப்படுத்தினால், மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஆலையை மூடும் வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்றும் போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications