கதிராமங்கலத்தில் தீ வைத்தது யார்? கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள்
தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததால் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளை நிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி குழாய் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விளை நிலங்களில் கச்சா எண்ணெய் பரவி வருவதால் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்று மக்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும், எந்தவித அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி குழாய்களை அகற்றுமாறு கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை முதலே அப்பகுதியில் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து எண்ணெய் கசிவை பார்வையிட வந்த அதிகாரிகளை தடுக்க முயன்றபோது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புக்கு தீவைக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் 2 பெண்களின் மண்டை உடைந்தது. இதைப் பார்த்த மற்ற பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தாங்கள் அமைதியாக போராட்டம் நடத்தியதாகவும், சாலையில் தீ வைத்தது காவல்துறைதான் என குற்றம்சாட்டினர். யாரோ செய்த தவறுக்கு அனைவரையும் எப்படி தாக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அங்க பெருமளவில் குவிந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications