அதான் முடிஞ்சு போச்சே.. அழகிரி பற்றிப் பேச விடாமல் கிருஷ்ணசாமியை தடுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்!
நெல்லை: அழகிரி பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முயன்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை பதில் அளிக்க விடாமல் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்பு மனுவை இன்று நெல்லையில் உள்ள தேர்தல் அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான உமா மகேஷ்வரிடம் தாக்கல் செய்தார்.

அப்போது, தி.மு.க மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், விருநகர் நகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மனித நேயமக்கள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, இதுவரை இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்த முறை எங்களுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.
நாங்கள் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு மட்டுமல்லாமல் தென் தமிழகத்திற்கே திறவுகோலாக அமையும். காரணம் இந்த தொகுதியின் மேம்பாட்டிற்காக நிறைய தொழில் வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
அப்போது அங்கிருந்த, செய்தியாளர்கள், அழகிரி பிரச்னையால் தி.மு.க வாக்குகள் சிதறுமா? என்று கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, கிருஷ்ணசாமியை தடுத்து குறுக்கிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர், "இது முடிந்துபோன பிரச்னை. அதை விட்டுவிடுங்கள்!" என்று கூறிவிட்டு கிருஷ்ணசாமியை அங்கிருந்து அழைத்து சென்று விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தென்காசியில் கிருஷ்ணசாமியை ஜெயிக்க விடமாட்டேன் என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications