ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் பொது மக்கள் உண்ணா விரதம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையை நீக்கக்கோரி மதுரை அலங்காநல்லூரில் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கோரி அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விலங்குகள் நல கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த இடைக்கால தடைவிதித்தது. இதனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் அனுமதி மறுத்து அண்மையில் உத்தரவிட்டது.
இதனிடையே ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்ற தடையால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் பொங்கல் திருநாளுக்காவது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்கோரி மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications