புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்... 50 பேர் கைது
சென்னை: பூந்தமல்லி அருகேயுள்ள மாங்காடு பரணிபுத்தூர் - கோவூர் சாலையில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடை முன்பு திரண்ட அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், மாணவிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் கலைந்து செல்லாததையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாங்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் பள்ளிக் கூடம், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு இது மிகவும் இடையூறாக அமைந்துள்ளது.
மேலும் போரூர், அய்யப்பன்தாங்கல், மாங்காடு, கோவூர் பகுதிகளை இணைக்கும் சாலையும் இங்கு உள்ளது. இங்கு மதுக்கடை திறந்துள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பாக அமையும். எனவே இந்த மதுக்கடையை மூட வேண்டும்'' என்றனர்.












Click it and Unblock the Notifications