குடிநீர் தட்டுப்பாடு..காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு
முறையாக குடிநீர் வழங்க கோரி நெல்லை அருகே காலிகுடங்களுன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி செங்கோட்டை அருகே உள்ள புதூர் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை அருகேயுள்ளது புதூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்ப்பட்ட பூலாங்குடியிருப்பு, கேசவபுரம், லாலா குடியிருப்பு, தவணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த பகுதிகளில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனதால் இங்குள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்படுகின்றன.
மேலும் இந்த கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர்திட்டம் மூலம் தினமும் 3 இலட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 தினங்களாக புதூர், கீழ புதூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் வழங்க கோரி கோஷமிட்டு அவர்கள் அலுவலக நுழைவு வாயில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications