காவிரி வாரியத்திற்காக பிரதமர் நிகழ்ச்சியை புறக்கணித்தேன்... கெத்து நாராயணசாமி!
சென்னையில் பிரதமர் பங்கேற்ற ராணுவ கண்காட்சி நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்த போதும் காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நிகழ்ச்சியை புறக்கணித்தாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவே பிரதமர் பங்கேற்கும் ராணுவ கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியை புறக்கணித்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னைக்கு அருகே திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமக்கு அழைப்பு வந்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நிகழ்ச்சியை புறக்கணித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியதாவது : காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி நான் பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பிரதமர் நினைத்திருந்தால் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.