அதிமுகவுக்குத் தாவினார் புதுச்சேரி கண்ணன்
சென்னை: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான கண்ணன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அதிமுக. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை இன்று காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவரும், புதுச்சேரி மாநில சட்டசபையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவருமான பி.கண்ணன் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையின் புரட்சித் தலைவர்
புதுச்சேரி கண்ணன், புதுவையின் "புரட்சித் தலைவர்" என்று கூறும் அளவுக்கு பல புரட்சிகளைப் படைத்தவர். காங்கிரஸ்காரரான இவர் அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மூப்பனாரின் அன்பைப் பெற்றவர். அவர் இருந்தவரை புதுவை காங்கிரஸில் கோலோச்சி வந்தார். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸுக்கு மாறினார். அதன் பின்னர் புதுக் கட்சி தொடங்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார். இந்த நிலையில் தற்போது அதிமுகவுக்கு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications