புதுவையில் அமைச்சரின் உதவியாளர் சரமாரி வெட்டிக் கொலை.. 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
புதுவையில் அமைச்சரின் உதவியாளர் பட்டப்பகலில் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை: புதுவை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன் என்பவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் செய்தித் தொடர்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர் கந்தசாமி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் கவுன்சிலரும் ஆவார்.

இந்தநிலையில் இன்று காலை அமைச்சர் கந்தசாமியின் அலுவலகத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கடலூர் - புதுச்சேரி சாலையில் உள்ள காட்டுப்பாளையம் அருகே வந்தபோது அங்குள்ள ஓடை புதரில் மறைந்திருந்த 10 பேர் கும்பல் திடீரென அவரை வழிமறித்து கீழே தள்ளியது. பைக்குடன் அவர் கீழே விழுந்ததும் அக்கும்பல் அரிவாளால் வீரப்பனை சரமாரியாக வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வீரப்பன் உயிருக்குப் போராடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று வீரப்பனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வீரப்பன் சிறிதுநேரத்தில் இறந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரெட்டிச்சாவடி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் உதவியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே திரண்டனர். இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications