அடுத்தடுத்து மரணங்கள்... புழல் சிறைக் கூடமா, தற்கொலை கூடாரமா?
சென்னை புழல் சிறையில் அண்மைக் காலங்களாக தற்கொலைகள் என்பது சாதாரண விஷயமாகி விட்டன, இதற்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னை : சென்னை புழல் சிறையில் அடுத்தடுத்து நடக்கும் தற்கொலைகளே பாதுகாப்பு குளறுபடிகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக சமூகநல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமார் மரணத்திற்கு பிறகு புழல் சிறையில் நடக்கும் தற்கொலைக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்பது வெட்டவெளிச்சமாக அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் இதற்காக எந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சமீபத்திய கைதிகளின் தொடர் தற்கொலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் போரூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் குமார் என்ற இளைஞர் புழல்சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவறைக்கு சென்ற செந்தில் குமார் அங்கேயே தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடரும் தற்கொலைகள்
இதே போன்று கடந்த மே 8ம் தேதி இளைராஜா என்ற இளைஞர் புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அண்ணா நகரில் ஆசிரியை நிவேதா என்பவரை கார் ஏற்றி கொலை செய்ததாக தீயணைப்பு துறை ஊழியர் இளைராஜா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

2 கைதிகள் உயிரிழப்பு
சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நாளே இளையராஜா சிறை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த மாதத்தில் மட்டுமே அடுத்தடுத்து 2 விசாரணைக் கைதிகள் சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மின்வயரை கடித்து தற்கொலை
பெண் மென்பொறியாளர் சூவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. மின்வயரை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

வசதிகள் என்ன?
புழல் சிறையானது நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்ற தகுதியுடன், கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. ஒரேநேரத்தில் மூன்றாயிரம் கைதிகளை அடைக்கும் வசதி கொண்டது. 30 அடி உயர புழல்சிறை சுவற்றின் மீது, ஒன்றரை அடி உயரத்துக்கு மின்வேலி, சிறை வளாகத்தைச் சுற்றிலும் 15 கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன.

தற்கொலைக் கூடங்களா?
இது தவிர, கண்காணிப்புக் கோபுரங்களும் கொண்டவை இந்தச் சிறை. குற்றவாளிகள் தங்களின் குற்றத்தை உணர்ந்து மனம் திருந்துவதற்காகவே சிறைக்குள் அடைக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக சிறைக்கு செல்லும் குற்றவாளிகள் ஒரேயடியாக உலகை விட்டு செல்லும் இடமாக மாறி வருவது கவலைக்குரிய விஷயமே.

பாதுகாப்பில் குறைபாடா?
சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன, எத்தனையோ வசதிகள் உள்ள புழல் சிறைச்சாலையில் செல்போன் பயன்பாட்டை தடுக்க ஜாமர் கருவி மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications