ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளுக்காக மல்லுக் கட்டிய ம.ந.கூ கட்சிகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்துமே மல்லுக்கட்டியதால்தான் தொகுதிகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தேமுதிக- ம.ந.கூ. கூட்டணியில் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன....அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடுவோம் என கடந்த ஒருவார காலமாக நாள்தோறும் அக்கூட்டணி தலைவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் தொகுதிகள் ஒதுக்கீடு இன்னமும் இறுதியாகவில்லை

இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்தோ, வேட்பாளர்கள் பட்டியலை ஒரே நாளில் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை என தவணை கணக்கில் நேற்று வெளியிட்டார். ஆனால் மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளோ தங்களுக்கான பல தொகுதிகளை தேமுதிக கபளீகரம் செய்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாக புலம்பி வருகின்றன.
அத்துடன் முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து தாங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று ஒவ்வொருகட்சியுமே விரும்புகின்றன. இதனால் ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளை யார் எடுத்துக் கொள்வது என்பதில் தேமுதிக- மநகூ. கூட்டணியில் பெரும் குழப்பம் நீடித்து வருவதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதை ஒப்புக்கொள்ளும் வகையில் ம.ந.கூ. தொகுதிகளின் விவரங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளுக்காக தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே போராடினோம்...விருப்பம் தெரிவித்தோம் என்பது உண்மை.
இறுதியில் ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகளும், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications