மத்திய அரசைக் கண்டித்து நாளை ரயில் மறியல்.. மநகூ பங்கேற்கும்... திருமாவளவன்
சென்னை: காவிரி விவகாரத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது தமிழகத்துக்கு இழைத்த துரோகம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக அரசு மதிக்கவில்லை. விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் இரண்டு நாட்களிலும் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டங்களில் பங்கு பெறுவார்கள். நான் 18ம் தேதி சென்னையில் நடைபெறும் ரயில் மறியலில் கலந்து கொள்ள இருக்கிறேன்.
தமிழகத்தை பொருத்தவரை டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
முன்னதாக, காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை முதலில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு கடைசி நாளில் மறுத்துவிட்டது.
இதனால் காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மறுக்கும் மத்திய பாஜக அரசிற்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தன. விவசாய சங்கங்கள், சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் ரயில் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications