தேமுதிக-ம.ந.கூட்டணியில் தமிழ்ப் புலிகள், வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப் படை இணைந்தன- வைகோ
சென்னை: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமிழ்ப் புலிகள் மற்றும் வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப் படை ஆகியவை இணைந்துள்ளதாக அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று வைகோ சந்தித்து பேசினார். அப்போது தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி ஆகியோரும் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமிழ்ப் புலிகள், வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப்படை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளில் அவர்களது வேட்பாளர்கள் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். ஏப்ரல் 10-ந் தேதி மாமண்டூரில் நடைபெறும் மாநாட்டில் முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறியிருந்தேன்.

தற்போது தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு வைகோ கூறினார்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, உட்கட்சி பிரச்சனையால் விஜயகாந்த் மனநிலை சரியில்லாமல் இருப்பதாக....என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
உடனே வைகோ குறுக்கிட்டு யாருக்கு மனநிலை சரியில்லை? என்ன வார்த்தையை பயன்படுத்திறீங்க? உங்களுக்கு மட்டும்தான் பேச்சுரிமை இருக்கா? மன்னித்துவிடுங்கள் எனக் கூறி விட்டு எந்த பதிலும் அளிக்காமல் சென்றார்.












Click it and Unblock the Notifications