முதல்வராக நீடிக்க தகுதி இல்லை- ஜெ. பதவி விலக வேண்டும்: வைகோ, ஜி.ஆர்., திருமா, முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை: இயற்கை பேரிடரின் போது ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் செயலிழந்து கிடப்பதால் முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஜெயலலிதா இழந்துவிட்டதாகவும் அவர் முதல் பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கை:
கடந்த ஒரு மாத காலமாக மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தும், உடைமைகளைப் பறிகொடுத்துவிட்டும் நிர்கதியாய்த் தவிக்கின்றனர்.

முடங்கிய அரசு
நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்து விட்டனர். பல இலட்சம் ஏக்கர் பரப்பு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த விளை பொருட்கள் பாழாகி, விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு நிர்வாக இயந்திரம் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போனதால், மழை வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மூழ்கிய தலைநகரம்
செம்பரம்பாக்கம் ஏரியை நவம்பர் 26 ஆம் தேதிக்குப் பின்னர் வெள்ள அபாயம் கருதி, படிப்படியாகத் திறந்து விடாமல், கனமழையும், நீர்வரத்தும் அதிகமான பின்னர், ஒன்றாம் தேதி திடீரென்று அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தலைநகரமே மூழ்கி தத்தளிக்கும் விபரீதம் ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்றுவரையிலும ஒரு வார்த்தைகூட பேசாமல் அமைதி காத்து வருவது மக்கள் மீதான அவரது அலட்சியப் போக்கைக் காட்டுகிறது.

முதல்வர் பதில் சொல்ல வேண்டும்
அரசு நிர்வாகத்தை நடத்தும் உயர் அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் முதல்வரின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உள்ளதால்தான் நிர்வாகம் நிலைகுலைந்து கிடக்கிறது. முதலமைச்சர்தான் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர். ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொறுப்பு என்று விளக்கம் கூறுகிறார்.

ரூ10 ஆயிரம் கோடி மட்டும்தானா?
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளச் சேதத்தின் மதிப்பு ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மத்திய அரசு குறைந்த பட்சம் 50 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். ஆனால் முதல்வர் ஜெயலலிதா ரூபாய் 10,560 கோடி மட்டும் தேவை என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். மழை வெள்ளச் சேதத்தை முறையாகக் கணக்கெடுத்து மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு அரசு நிர்வாகம் முடங்கி விட்டது.

பதவி விலகுக
இயற்கைப் பேரிடர் தாக்கியபோது, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல் இழந்து கிடப்பதால், முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீகத் தகுதியை ஜெயலலிதா இழந்துவிட்டார். எனவே முதல்வர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும்.
இவ்வாறு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications