முடிவுக்கு வருகிறது மக்கள் நலக் கூட்டணி? புதுவை விசிக மாநாட்டுக்கு வைகோவுக்கு அழைப்பு இல்லை!
மக்கள் நலக் கூட்டணி இனி தொடர்ந்து செயல்படாது எனக் கூறப்படுகிறது. புதுச்சேரியில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டுக்கு வைகோ அழைக்கப்படவில்லை.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி இனி இருக்காது என்பது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டுக்கு மதிமுக பொதுச்செயலரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ அழைக்கப்படாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் டிசம்பர் 28-ந் தேதி "மோடி அரசின் பொருளாதார நெருக்கடி நிலை... அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு" மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது. இதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இடதுசாரி தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் மட்டும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

திருமா விளக்கம்
ஆனால் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ இந்த மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வைகோ ஆதரிக்கிறார். ஆகையால் அவரை மாநாட்டுக்கு அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மதிமுக முடிவெடுக்கட்டும்
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் முத்தரசன், மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பதா? இல்லையா? என்பதை மதிமுகதான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சிபிஎம் நிலை...
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான டிகே ரங்கராஜன், மக்கள் நலக் கூட்டணி என்பது நிரந்தரமான அமைப்பு அல்ல; தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணிதான் எனக் கூறியுள்ளார்.

முரண்பாடுகள்
மக்கள் நலக் கூட்டணியானது திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுகவுடன் எந்த காலத்திலும் சேர்ந்து செயல்படாது என முடிவு செய்திருந்தது. ஆனால் அதிமுகவுக்கு வைகோ முழுமையாக ஆதரவு தருகிறார்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ திமுக, காங்கிரஸ் தலைவர்களை அழைத்து மாநாடு போட்டது; இதற்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

விரைவில் கலைப்பு
தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை வைகோ முழுமையாக ஆதரிக்கிறார். ஆனால் இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த முரண்பாடுகள் தொடர்ந்து வருவதால் மக்கள் நலக் கூட்டணி விரைவில் கலைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications