போக்குவரத்து கழகத்தை சீரமைக்க திமுக குழு அமைப்பு.. அரசு மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தவா?
தமிழக போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைக்க திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைக்க திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நிலுவைத் தொகையை வழங்கக்கோரியும் ஊதிய உயர்வு கோரியும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
இதனால் பொங்கல் சமயத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திமுகதான் காரணம்
2010 வரையிலான திமுக ஆட்சியே போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அரசு பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக தமிழக அரசு உயர்த்தியது.

பூதாகரமான போராட்டம்
இதனைக்கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.

குழு அமைத்த திமுக
பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக் கழகத்தை சீரமைக்க அரசுக்கு ஆலோசனை தர திமுக சார்பில் குழு ஒன்று இன்று அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தொமுச சண்முகம், செங்குட்டுவன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அறிக்கை அளிப்பார்கள்
இக்குழுவினர் போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்வார்கள். அந்த அறிக்கை திமுக செயல் தலைவரான ஸ்டாலினிடம் வழங்கப்படும்.

கட்சி மேலிடம் உத்தரவு
இதுவரை எந்தப் பிரச்சனைக்கும் திமுக இப்படி குழுவை அமைத்து ஆலோசனை வழங்கியதில்லை. இந்நிலையில் போக்குவரத்துத்துறை பிரச்சனைக்கு தானாக ஒரு குழுவை அமைத்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அறிக்கையை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது கட்சி மேலிடம்.

அரசியல் ஆதாயத்துக்காகவா?
அரசின் அந்தந்தத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் உள்ள நிலையில் எதிர்க்கட்சியான திமுக வான்ட்டடாக குழுவை அமைத்துள்ளது. உண்மையிலேயே பிரச்சனைக்கு தீர்வு காணவா? அல்லது அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் குற்றச்சாட்டுக்கு பிரயாச்சித்தம் தேடிக்கொள்ளவா அல்லது இந்த ஆளும் அரசு எதற்கும் துப்பில்லாதது என்ற பிம்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications