பணப்பட்டுவாடாவில் பட்டைய கிளப்பிய ஆர்.கே.நகர்... சவாலை சமாளிக்குமா வருமான வரித்துறை?
பணப்பட்டுபவாடாவில் வரலாற்று சாதனை படைத்த ஆர்.கே நகர் தொகுதியில் வருமான வரித்துறையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை: பணப்பட்டுவாடா புகாரில் வரலாற்று சாதனை படைத்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.கே நகர் தொகுதியில் வருமான வரித்துறையினர் இந்த முறை தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்.
தேர்தல் என்றாலே அது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வாரி இறைக்கும் கொடைத் திருவிழா. திருமங்கலம் இடைத்தேர்தலில் தொடங்கிய பணப்பட்டுவாடா பார்முலா, வகை தொகையில்லாமல் போனதால் 2016ல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் முதன்முறையாக தமிழகத்தில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக பிரமுகர் அன்புநாதனின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 4.77 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதே போன்று ரூ. 1.3 கோடி மதிப்புள்ள வேட்டி, சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்ததாக தேர்தல் ஆணையம் கருதியது.

நிறுத்தப்பட்ட தேர்தல்
இதே போன்று அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் பழனிசாமி வீட்டில் ரூ. 1.98 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு வருமான வரித்துறையினர் கட்டு கட்டான பணத்தை பறிமுதல் செய்ததையடுத்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் முதன்முதலாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அமைச்சர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
இந்திய தேர்தல் வரலாற்றில் பெரும் கரும்புள்ளியை ஏற்படுத்தியது இந்த பணப்பட்டுவாடா சம்பவங்கள். ஆனால் அதோடு இந்த விவகாரம் நின்றுவிடவில்லை, ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இதே நிலைமை தான். அமைச்சர் விஜயபா1கர் வீட்டில் நடத்திய வருமான வரி சோதனையில் ரூ. 89 கோடி பணம் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.

விறுவிறுப்பான தேர்தல் களம்
இதனையடுத்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருமான வரித்தறையின் கண்காணிப்புப் பிரிவினர் தயார் நிலையில் உள்ளனர். அதிமுக, தினகரன் அணி இடையே கடுமையான போட்டி, இந்த இரண்டு பேரையும் முறியடித்து வெற்றி காண நினைக்கும் திமுக என தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது.

வருமான வரி அதிகாரிகள் தயார் நிலை
எனவே பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்க கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்கே நகர்த் தொகுதிக்கு அருகில் இருக்கும் வங்கிகள், தனியார் விற்பனையகங்களின் பணப்பரிவர்த்தனையும் வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் குழுவிலும் வருமான வரி அதிகாரிகள் இடம்பெற உள்ளனர்.

வருமான வரித்துறைக்கும் சவால்
மொத்தத்தில் இந்த இடைத் தேர்தல் அரசியல் கட்சியினருக்கு மட்டும் சவாலான விஷயம் அல்ல. பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க வேண்டிய சவால் தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித்துறைக்கும் உள்ளது.












Click it and Unblock the Notifications