ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு.. விரைந்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை.. நாளையே "ஹியரிங்"!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான திமுகவின் வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரிலும் அமைச்சர் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய சோதனையின் அடிப்படையிலும் அந்த தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவில் நடைபெறும் மோதல் காரணமாக இந்த தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்கின்றனர் என்பதை பார்க்க திமுக , அதிமுகவின் இரு அணிகளும் ஆர்வமாக உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் குஜராத் தேர்தல் தேதி அறிவித்தபோது ஆர்.கே.நகருக்கு இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.
இதனிடையே, போலி வாக்காளர்களின் நீக்கம் குறித்தும், பணப்பட்டுவாடா குறித்தும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதியும், மருதுகணேஷும் (ஆர்.கே.நகர் வேட்பாளர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவிக்க இந்த வழக்குகள் இடைஞ்சலாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையிட்டது.
தேர்தல் ஆணையத்தின் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான திமுக வழக்குகள் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்றார்.