ஆர்.கே.நகரில் ஆளும் கட்சியின் அத்துமீறல்கள்.. அசையாத தேர்தல் ஆணையம்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு என்று எதுவுமே இல்லாமல் அனைத்துமே ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அங்குள்ள மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன், சுயேச்சையாக டிராபிக் ராமசாமி மற்றும் சிலர் களத்திலுள்ளனர்.

அதிகாரம் மிக்க ஆணையம்
ஒரு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அங்கு அரசுக்கு செல்வாக்கு போய்விட வேண்டும் என்பது விதிமுறை. அந்த தொகுதியின் ஆளுகை, தேர்தல் ஆணையத்தின்கீழ் வந்துவிடும். தேர்தல் ஆணையர்தான் அத்தொகுதியின் அறிவிக்கப்படாத முதல்வர். ஆனால், ஆர்.கே.நகரில் எல்லாம் தலைகீழாக உள்ளதாக தலையில் அடிக்கின்றனர், கள நிலவரத்தை ஆய்வு செய்த மூத்த பத்திரிகையாளர்கள்.

மீிடியா அனுமதி
ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது அந்த அலுவலகத்தையே மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது கண்கூடாக தெரிந்தது. அந்த அலுவலக ஏசி, படிக்கட்டுகள் என அனைத்துமே, புதுப்பொலிவாக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கலை பதிவுசெய்ய ஜெயா டி.வி யைத் தவிர, எந்த மீடியாவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பகுதியில் ஏன் ஒரு குறிப்பிட்ட மீடியாவுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இந்த ஒரு கேள்வியே போதும் தேர்தல் ஆணையம் எவ்வளவு அதிகாரத்தோடு உள்ளது என்பதை நிரூபிக்க.

அரசு அதிகாரிகள்
மனுத்தாக்கலின்போது செய்தித் துறை கூடுதல் இயக்குநர் எழிலழகன் உள்ளிட்ட ஊழியர்கள் அங்கே வந்தனர். 2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை பத்திரிகைகளிடம் வழங்கியதற்காக அரசு செய்தித்தொடர்பாளர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுபோல இப்போது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரையும் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனையும் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் என அனுமதி கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன்.

சரத்குமார், தமிழரசன்
இவர்கள் இரண்டு பேருமே இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் என்பது கூட தேர்தல் கமிஷனுக்குத் தெரியாமல் போனதா என்பதுதான் இதில் வேடிக்கை. சேலத்தைச் சேர்ந்த போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், விடுமுறை எடுத்து வந்து ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்காக ஓட்டு கேட்ட காமெடி அரங்கேறியது. வாட்ஸ்சப்பில் புகைப்படங்கள் சுற்றியது. ஆனால் இதெல்லாம் தேர்தல் கமிஷனின் காதில் விழவில்லை என்பது விந்தை.

அதிகாரி அலுவலகம் முன்பு ரோடு
இத்தனைக்கும் மேலே, தேர்தல் அதிகாரி செளரிராஜன் அலுவலகம் எதிரிலேயே புதிதாக சாலை போட்டுள்ளனர். தேர்தல் அதிகாரி அதன் வழியாக பயணிக்கிறார். ஆனால், ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஜெயலலிதாவின் அதிமுக இத்தொகுதியில் தனித்து போட்டியிடவில்லை. 'கூட்டணி' அமைத்தே போட்டியிடுகிறது என்பது தெளிவாகிறது. ஆனால், கூட்டணியில் இருப்பது கட்சியல்ல என்பதுதான் ஆர்.கே.நகர் அல்லோகலம்.












Click it and Unblock the Notifications