நல்லவர்களை கொண்டு அரசியல்னா... புத்தர், மகாவீர்ரை வைத்தா? ரஜினிக்கு ராதாராவி சூடு
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் தமிழகத்தின் முதல்வராக தமிழன் மட்டுமே இருக்க வேண்டும் என்று நடிகரும் திமுக பிரமுகருமான ராதாரவி தெரிவித்தார்.
திருவாரூர்: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அரசியலுக்கு வரலாம், ஆனால் தமிழகத்தின் முதல்வராக தமிழன் மட்டுமே இருக்க வேண்டும் என்று திமுக பிரமுகர் ராதாரவி தெரிவித்தார். மேலும் நல்லவர்களை கொண்டு அரசியல் நடத்துவேன் என்று ரஜினி கூறுவதை பார்த்தால் புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவீரா என்றும் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூரில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்தவர்கள், தமிழகத்தை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் தெரிந்து கொள்ளட்டும். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது குறித்து பல வழிகளில் விடை தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து யாரிடமாவது கேட்கலாம் என்று உள்ளேன். ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன்.
ஆர்கே நகர் தேர்தலில் கையெழுத்து போட 10 பேர் கூட இல்லாத விஷாலை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். கமல், நாளை நமதே என தொடங்கி பிரசாரம் செய்ய உள்ளார். அவருடைய ஊரையே அவர் பார்த்ததில்லை. முதலில் அவர், அதை பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் முதல்வராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும். பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிக்க முடியும் என்பது போன்று பிறப்பால் தமிழர் மட்டுமே தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என்று ராதாரவி பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications