மகளுக்கு கல்யாணம்... நான் ரொம்ப பிசி... ராஜினாமாவிற்கு ராதிகா கொடுத்த விளக்கம்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக இருந்த சரத்குமார் நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்தது ஒரு புறம் இருக்க சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவியாக இருந்த ராதிகா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாராம். ஆகஸ்ட் மாதம் என் மகள் ரேயான் திருமணம் நடக்க இருக்கிறது இதனால் சங்கப்பணிகளை கவனிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ராதிகா.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். தற்போது இச்சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் பொறுப்பு வகித்து வந்தார்.
இதுபோல் சங்கத்தின் செயலாளராக நடிகை குஷ்பு போட்டியின்றி தேர்வானார். சங்கத்தின் பொருளாளராக டி.ஆர். பாலேஸ்வர், துணைத்தலைவர்களாக குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார், இணை செயலாளர்களாக இ.ராமதாஸ், டி.வி.சங்கர் ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக பி.ராதா, சுஜாதா கோபால், பி.சீனிவாசன், மனோபாலா, சீனிவாசலு, மதி ஒளி குமார், வெங்கடாச்சலம், ஜெயக்குமார், செய்யாறு ரவி, வினயா கிருஷ்ணன், ஜெயவேல், சதீஷ் ஆகியோர் தேர்வானார்கள். சங்கத்தின் காப்பாளர்களாக ஏ.வி.எம். சரவணன், டி.ஜி.தியாகராஜன், அழகன் தமிழ்மணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ராதிகா ராஜினாமா
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக இருந்து வந்த ராதிகா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
குஷ்பு உடன் ராதிகா
குஷ்புவுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு என்றும், நடிகர் சஙங்க தேர்தலின்போது தனக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை அதனால் தான் ராதிகா ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. ராதிகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது சுஜாதா தலைவராக(பொறுப்பு) இருந்து வருகிறார்.
ராதிகா விளக்கம்
அதே நேரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை தனது சொந்த காரணங்களுக்காகத்தான் ராஜினாமா செய்துள்ளதாக ராதிகா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் என் மகள் ரேயான் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளில் பிசியாகிவிட்டேன். என் மகன் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறான். அவனுக்கு தனி கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது.
சங்கத்திற்கு ஆலோசனை
திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படி பல காரணங்களால் என்னால் சங்க பணிகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் ராஜினாமா செய்தேன். என்றாலும், சங்கத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருப்பேன். இதுதான் உண்மையான காரணம். இதுதவிர சொல்லப்படும் வேறு காரணங்கள் அனைத்தும் பொய் என்று ராதிகா கூறியுள்ளார்.