'ராகிங்'கில் பாதிக்கப்பட்ட மாணவி: வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டு தந்தையுடன் தர்ணா
கரூர் : ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி வேறொரு பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தையுடன் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பட்டாபி. டிஎன்பிஎல் ஆலை ஊழியர். இவரது மகள் ஜனனி(16) இவர் மண்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த மாதம் 6ம் தேதி விடுதிக்கு வந்த மாணவியை, சில மாணவிகள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனதளவில் பாதிப்படைந்த ஜனனி, தந்தையை வரவழைத்து விடுதியை விட்டு சென்றதோடு, வேலாயுதம்பாளையம் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகிகளிடமும் மாணவி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஜனனி புகார் அளித்தார். இதனையடுத்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் ராகிங் குறித்து, வாங்கல் மற்றும் வேலாயுதம்பாளையம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவியை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் டிசியை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனர். பள்ளியில் இருந்து டிசியை பெறும் பட்சத்தில் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாட்டினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தினர் செய்துதர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவியின் தந்தை திரும்பவும் மனு கொடுத்திருந்தார்.
ஜனனியின் கல்விக்கு எந்தவித ஏற்பாடும் செய்யப்படாததால், ஜனனி, தந்தை பட்டாபியுடன், நேற்று மதியம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முதன்மை கல்வி அலுவலர் அங்கு இல்லாததால், அலுவலக அதிகாரிகள், மண்மங்கலம் பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, டிசி வழங்க ஏற்பாடு செய்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் மாணவி படிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து மாணவி ஜனனி தந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications